Wednesday, October 20, 2010

செதுக்காத சிற்பங்கள்’ : இயல்பும் - முரணும்



பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதே சமுதாயம்.
இதில் காணப்படும் கருத்து .இம்முரண்பாடுகளைக் கட்டவிழ்க்கும் முயற்சியே கதையாக உருப்பெருகின்றன. ஒரு படைப்பாளனின் உள்ளத்தை நெருடிய செய்திகள் சமுதாயத்தில் பல மாற்றங்கள் உருவாவதற்கு அடித்தளமாய் அமைகின்றன.
க.ப.அறவாணன் அவர்களின் ‘செதுக்காத சிற்பங்கள்’ என்ற கதைத்தொகுப்பு சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்களை, நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது.
‘செதுக்காத சிற்பங்கள்’ என்னும் தலைப்பு பல்வேறு உட்பொருள்களைக் கொண்டுள்ளது. செதுக்காமல் சிற்பம் செய்ய இயலாது. செதுக்கினால் தான் சிற்பமாகும்;;;.ஆனால், இங்கு செதுக்காத சிற்பங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். சிற்பி எதை நினைத்துச் செதுக்கினானோ அதைத்தான் வடிவமாக உருப்பெற்று பார்ப்பவர் கண் முன் காட்சியளிக்கும். ஆனால், செதுக்காத சிற்பத்தினைக் காண்பவர் தங்கள் மன உணர்விற்குத் தகுந்தார் போல் கற்பனை செய்து கொள்ளலாம். ஆசிரியர் சிற்பத்தினை வடிவமைத்து, வாசகரையும் சிந்திக்கத் தூண்டுகிறார்.
இக்கதைத் தொகுப்பில் 29 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை, கதைக்கருவின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்;.
பொதுமை அடிப்படையிலானவை
1. கதை அமைப்பு முறை,
2. தலைப்புப் பொருத்தமும் முடிவும்.
கதைக்கருஅடிப்படையிலானவை

1. சமுதாய சிந்தனைகள்,
2. பெண் நிலைப்பாட்டுத்தன்மை,
3. வரலாற்றுப்புனைவுகள்


பொதுமை அடிப்படையிலானவை

1. கதை அமைப்பு முறை
யதார்த்தம் (4,8,9,2,3), சளிப்பு (1,5,6,7,10,11,15,16,17,18,19), வெறுப்பு (12,20,21,22), மகிழ்ச்சி (13,14,24,25,26) கற்பனை (27, 28, 29) என்பவற்றை மையமிட்டதாக கதைக்கருக்கள் அமைந்துள்ளன. கதையினைத் தொடக்கம் முதல் முடிவு வரை வளர்த்துச் செல்லும் விதம் தொய்வின்றித் தொடர்கிறது. கதைமாந்தர்களைப் பேச வைக்கும்முறை இயல்பாக உள்ளது. கதைமாந்தர்களைத் தேவையில்லாமல் புகுத்துதல் அல்லது பாதியிலேயே விட்டுவிடுதல் போன்ற தன்மைகள் இல்லை. தேவை ஏற்படின் கதாப்பாத்திரங்களுக்குப் பெயரிடுதலும், தேவை ஏற்படாத கதைகளில் பெயரிடாமல் செல்லும் போக்குகள் உள்ளன.
2.தலைப்புப் பொருத்தமும் முடிவும்
கதைக்கருக்களை மையமிட்ட தலைப்புகளும், பெரும்பான்மை அதற்குப் பொருத்தமான முடிவுகளும் அமைந்துள்ளன. நியாயமா? (1), என்றைக்குச் சுதந்திரம் எங்களுக்கு? (5), எம்புட்டுப் படிப்பு? (6), காரணம் கடவுளா? (7), ஏன் பிறந்தேன் இத்துயர் நாட்டினிலே? (16), ஜனநாயகத்தின் விலை ஜனங்களின் கண்ணீரா? (21), அடுக்குமா?,(22 ), சமநீதி! (22), என்ற தலைப்புக்களை மையமிட்ட கதைகளில் இச்சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், அதற்குத் தீர்வு காணமுடியாச்சூழல் நிகழ்வதையும் வேதனையோடு தலைப்புகளிலேயே பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டுச் சுவரின் சோக மரணம்(2);, வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும் (12);, ஒரு தமிழ் ஆப்பிரிக்கனின் அக சரிதம்(10), இன்னொரு சுனாமி! (20), அம்பத்தி ஆறாவது ஜனவரி 26 (19), போன்ற தலைப்புகளில் இச்சமூகத்தின் அவலநிலையைச் சுட்டிக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் ஒரே ரூபாய்! (3), சிவ புராணம் முடியவில்லை (13), அவன் குடிக்கவே மாட்டான் (14), பிச்சை புகினும் (23), கோடியே தேடி வந்தாலும்(24), காந்தி வாத்தியார்(25), போன்ற கதைகளில் நேர்மையான மனிதர்களின் பதிவுகள் தென்படுகின்றன. அந்த நாளும் வந்திடாதோ! (4 ), நட்பின் வலிமையைப் பற்றியது. கண்ணே! உன்னை மறப்பேனா? (8), பாசத்தின் நெகிழ்வாய் அமைந்துள்ளது. காலம் நம் கையில்(15), நாள் என் செயும்;? கோள் என் செயும்? (17) ஆகியன மூட நம்பிக்கைச் சாடல்களைப் பதிவாக்கியுள்ளன.
நான் ஃபார்வேடாம் (11), இடஒதுக்கீடு பற்றிய ஆசிரியரின் கருத்துப் பதிவு. காதல் கதையல்ல: காவியம் (27), அவனுக்கே பிச்சி ஆனாள் (28), மனிதனை மணக்க மாட்டேன்(29) ஆகியன புராணங்களின் புதுப் புனைவுகள். இக்கதைத் தொகுப்பில் அமைந்துள்ள 29 கதைகளுக்கும் தலைப்புகள் இயல்பாகவும், கதைக் கருவே தலைப்பாகவும் அமைந்துள்ளன.
பெரும்பான்மையான கதைகளில் முடிவுகள் பொது உண்மைச் சார்ந்ததாகவும், நான் ஃபார்வேடாம், வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும் போன்ற கதைகளின் முடிவுகள் வேறுபட்ட சிந்தனை உடையனவாகவும் உள்ளன.
கதைக்கரு அடிப்படையிலானவை
1.சமுதாயச் சிந்தனைகள்
சமுதாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் தன் உணர்வினை வெளிப்படுத்தும் வாயில்தான் படைப்பாற்றல். சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், அதனால், தான் அடைந்த உணர்வினையும் படைப்புக்களாக வெளிப்படுத்துகின்றனர்.
உயிர்களைக் கொல்லாமை (25), கைய+ட்டு வாங்காமை (13), கள்ளுண்ணாமை (14), வறுமையிலும் செம்மையான வாழ்க்கை (24) போன்ற நன்னெறிகளைக் காந்தியத்தின் வழி நின்று வளர்த்துச் செல்கிறார்.
சுயநலமற்றத் தொண்டறம் (1), கல்விக்கு நன் மதிப்பற்ற தன்மை (6), மூடநம்பிக்கையைத் தகர்த்தல் (15,16), நேர்மைக்குத் தண்டனை தரும் உலகம்(16), ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆகியும் குடியரசு அற்ற நிலை(19), உழைப்பினையே குறிவைத்து துரத்தும் வறுமையும், ஓய்வின்மையும்(18,22), உலக மயமாதல் வணிகத்திற்கு மட்டும், மனிதர்களுக்கு இல்லாதநிலை என்று சமுதாயச் சீர்கேடுகளுக்குச் சில இடங்களில் தீர்வுகாண நினைக்கும் மனப்போக்கு அமைந்துள்ளது.
எந்த உயிரையும் தன் உயிர் போல் பாவிக்கும் மனம் (8), நட்பு (4), மனித நேயம் (26) என்பவை இயல்பான பதிவுகளாக உள்ளன.
2.பெண்ணிய நிலைப்பாட்டுத்தன்மை
என்றைக்குச் சுதந்திரம் எங்களுக்கு(15), என்ற சிறுகதைகயில் வரதட்சணை கொடுமைதாளாமல் இறந்துபோன பெண்ணையும், அக்குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணையும், ஒருங்கே இணைக்கும் விதமும், ஒரு பெண்ணின் கொடுமையினை ஆண் விவரிக்கும் தன்மையும், ஆறு பக்கச் சிறுகதையினில் நாலே பத்தியில் சொல்லவந்த செய்தியினை நுணுக்கமாகவும், நெஞ்சில் தைக்கும் வண்ணமும் சொல்லும் விதமும் அருமையாக அமைந்துள்ளன.
பல சிறுகதைகளில் அமையும் பேச்சு வழக்குகளில் பெண்களைப் பெட்டை என்றும் பொட்டை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெட்டை என்ற சொல்லாடல் பேச்சு வழக்கில் மருவி பொட்டை ஆயிற்று. பொட்டை என்பது ஊனத்தைக் குறிப்பது. மேலும் பொட்டை என்பது ஆண்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக குறிப்பிடும் சொல்லாக வழக்கில் உள்ளது. பெண்ணியச்சிந்தனையில் மிகுந்த நாட்டமுள்ள கதாசிரியர் இச்சொல்லாடலைப் பயன் படுத்தியதன் நோக்கம் தெரியவில்லை.
3.வரலாற்றில் புதுப்புனைவு
காதல் கதையல்ல : காவியம்(27), அவனுக்கே பிச்சி ஆனாள்(28), மனிதனை மணக்க மாட்டேன்(29) என்ற மூன்றும் வரலாறு தொடர்பானவை. இளங்கோ, சுந்தரர், ஆண்டாள் இவர்களின் காதலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதும், வாசகர்களை வரலாறு நடைபெற்ற காலத்திற்கே இட்டுச் சென்ற விதமும், நடப்பு போன்ற தோற்றமும் மிகவும் அருமையாக அமைந்துள்ளன.

முரண்பாடுகள்
நான் ஃபார்வேடாம்(11), என்ற சிறுகதையில் இடஒதுக்கீட்டினால் வேலை கிடைக்காமல் போகும் ஏழை பிராமணக் குடும்பத்தின் மனநிலையைப் படம் பிடித்துள்ளார். வீட்டுக்காரரும், சின்ன வீட்டுக்காரரும்(12) என்ற சிறுகதையிலும் தன் மகனையும், மகளையும் ஐ.ஏ.எஸ், ஆக்கிட “ அரசு கொடுக்கிற சலுகை வேறு இருக்கிறது. படிக்கவும் இடம் கிடைக்கும். படிச்ச பிறகு வேலையிலும் இடம் கிடைக்கும். மாஜி மந்திரி இன்றைய நிலவரத்துக்குப் பத்துக் கோடிக்குச் சொந்தக் காரியாக இருந்தாலும், மிகமிகப் பின் தங்கியோர் பட்டியலில் நாம் இருக்கிறோம்” என்று சின்ன வீட்டுக்காரர் சொல்வது போல் கதை அமைக்கப் பட்டுள்ளன. இடஒதுக்கீடு என்பது இந்தச் சாதிய சமுதாயத்தின் அடிப்படைத் தேவை கருதியும், மக்கள் வாழும் தொகையின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டு, பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட உரிமை. இதனை மையமிட்டேதான் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிலும் உள் ஒதுக்கீடு கேட்க காரணம். அவ்வாறு இருக்க ஆசிரியர் சொல்ல வரும்கருத்து சமூகநீதித் தத்துவத்திற்கு முரணாய்த்தென்படுகிறது.
பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவாக இருக்கும் நிலையில் வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும்(12) சிறுகதையில் அரசியலில் ஈடுபாடும் பெண்ணை ஒழுக்கமற்றவளாகச் சித்தரித்து இருப்பதுடன், அவளுக்கு வந்த எயிட்ஸ் நோய் வீட்டுக்காரருக்கும், சின்ன வீட்டுக்காரருக்கும் பரவி இருப்பதாக கதை அமைக்கும் போக்கும் கண்ணுக்குத் தெரியாத புள்ளியைப் ப+தக்கண்ணாடி வைத்து பார்ப்பது போல் உள்ளது.
நிறைவுரை
‘செதுக்காத சிற்பங்கள்’ சிறுகதைத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான கதைக்கருக்கள் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும், நேர்மையான மூடநம்பிக்கை அற்ற உலகினை உருவாக்கத்தலைப்படுவதாகவும் அமைந்துள்ளன.

‘செதுக்காத சிற்பங்கள்’
கதை எண்கள் (பக்க எண்கள்)
நியாயமா?....(31)
தமிழ்நாட்டுச் சுவரின் சோக மரணம்!....(35)
திருவள்ளுவர் ஒரே ரூபாய்!....(38)
அந்த நாளும் வந்திடாதோ!.... (45)
என்றைக்கு சுதந்திரம் எங்களுக்கு?....(55)
எம்புட்டுப் படிப்பு?....(61)
காரணம்;: கடவுளா?.... (64)
கண்ணே! உன்னை மறப்பேனா?...(70)
சில கணங்கள், சில குணங்கள்!....(75)
ஒரு தமிழ் ஆப்பிரிக்கனின் அக சரிதம்!... (82)
நான் ஃபார்வேடாம்….(90)
வீட்டுக்காரரும், சின்ன வீட்டுக் காரரும்…(96)
சிவ புராணம் முடியவில்லை!....(103)
அவன் குடிக்கவே மாட்டான்….(108)
காலம் நம் கையில்….(114)
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினிலே?....(122)
நாள் என் செயும்? கோள் என் செயும்?....(128)
சம நீதி!........ (141)
அம்பத்தி ஆறாவது ஜனவரி 26….(.145)
இன்னொரு சுனாமி!....(153)
ஜனநாயகத்தின் விலை ஜனங்களின் கண்ணீரா?...(159)
அடுக்குமா இது?....(165)
பிச்சைப் புகினும்….(172)
கோடியே தேடி வந்தாலும்….(176)
காந்தி வாத்தியார்… (180)
இப்படியும் ஒரு தமிழ்ப் பெண்…(186)
காதல் கதையல்ல: காவியம்..(193)
அவனுக்கே பிச்சி ஆனாள்…(202)
மனிதனை மணக்க மாட்டேன்..(210)


மு.சு.கண்மணி

மாதர்மித்திரியில் அழகு


19-ஆம் நூற்றாண்டிலேயே பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், பெண்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும் பெண்களுக்கென்றே இதழ்கள் பல வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்த முதல் மகளிர் இதழ் அமிர்தவசனி. இவ்விதழ் 1860ஆம் ஆண்டு வார இதழாகத் திருச்சியிலிருந்து வெளியானது. இதன் ஆசிரியர் திரு. அமிர்தபாபு. இதன் தொடர்ச்சியாக 1883-இல் சுகுண போதினியும், 1887-இல் மாதர்மித்திரி, மகாராணி என்ற இரு இதழ்களும், 1891-இல் பெண்மதிபோதினியும் 1899-இல் மாதர் மனோரஞ்சனியும் பெண்களுக்கான இதழ்களாக வெளிவந்தன.

இவற்றுள் சில இதழ்களே தற்பொழுது காணக்கிடைக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாகக் கிடைக்கவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட இதழ்களுள் 1887-இல் வெளியான மாதர்மித்திரியின் சில இதழ்கள் இன்று கிடைக்கின்றன.

இதழியல் தொடர்பான ஆய்வேடுகளும், கட்டுரைகளும் பலவாக வெளிவந்தாலும், ‘மாதர்மித்திரி’ பற்றிய முதன்மையான ஆய்வு இதுவேயாகும். மாதர் மித்திரி யென்றால் பெண்களின் தோழி என்று பொருள். இதன் அடிப்படையில் 1887-ஆம் ஆண்டு ஜுலை மாதம் மாத இதழாக வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் திருமதி. ஏ. ரூடிஸில். சென்னை வேப்பேரி மெதடிஸ்ட் எப்பிஸ் கோப்பல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட இவ்விதழின் அளவு 24 ஷ் 18 செ.மீ. பன்னிரண்டு பக்கங்கள் கொண்ட இவ்விதழின் விலை இரண்டு அணா. மொத்தம் 500 படிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் இதழ் ‘பிரிட்டீசு நூலகத்தில்’ உள்ளதாக அ.மா. சாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இம்மாதர்மித்திரியின் 1887-ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 1888-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான ஓராண்டு (12) இதழ்கள் இன்று கிடைக்கவில்லை. ஆனால் 1888-ஆம் ஆண்டு ஜுலை மாதம் துவங்கி 1889-ஆம் ஆண்டு ஜுன் வரையிலாக ஓராண்டு கால இதழ்கள் கிடைக்கின்றன. அதன் பின்வரும் பன்னிரண்டு ஆண்டுகளின் இதழ்கள் கிடைக்கவில்லை. 1901-ஆம் ஆண்டு வெளியான சில இதழ்கள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கப்பெறும் இதழ்களில் 1888 முதல் 1889 வரை வெளியான ஓர் ஆண்டுகால (12) இதழ்களில் மட்டும்தான் பெண்ணியக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் கிடைக்கும் 1901-ஆம் ஆண்டு முதல் வெளியான இதழ்கள் முற்றிலும் கிறித்துவ மதக்கோட்பாடுகளைக் கூறும் இதழாக அமைந்துள்ளது. இறையியல் இதழாக மாறியதற்கான காரணத்தையும் அறியமுடியவில்லை. அதனால் பெண்ணியக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓராண்டு கால இதழ்களே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இதழ்களில் அமைந்துள்ள கட்டுரைகளில் ‘அழகு’ பற்றிய புதுமையான கருத்துக்கள் பல அமைந்துள்ளன. கட்டுரை ஆசிரியர்கள் குறிப்பிடும் அழகியல் கோட்பாடுகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
மு.சு.கண்மணி

Sunday, December 27, 2009

Saturday, December 26, 2009

சங்க இலக்கியத்தில்....

சங்க இலக்கியத்தில் மகளிரின் வணிக உத்தி

மு.சு.கண்மணி,

மனித சமுதாய வரலாற்றில், தாயாட்சி சமுதாயம் மறைந்து, தந்தையாட்சி சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்தே, பெண்ணென்ற பாலினத்தின் மீதான ஆளுமை தொடர்ந்து கொண்டு உள்ளது. சங்க காலச் சமுதாய மக்களிடத்தும் இத்தகைய ஆளுமைப் பண்பைக் காணமுடிகிறது.

தமிழின் முதல் நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் எம்மொழியிலும் இல்லாத மிகச்சிறந்த ஒரு இலக்கணக் கோட்பாடாக மனிதவாழ்வில் அகத்திற்கும், புறத்திற்கும் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் இலக்கண விதிகளில் ஆணிற்கு ஆளுமையையும், பெண்ணிற்கு அடங்குதலையும் தமிழச்; சமுதாயத்திற்கே உள்ள பண்பாகச் சுட்டப்பட்டுள்ளன. இப்பண்பானது ‘தொல்காப்பியர்’ என்ற தனிமனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என்பதும், காலந்தொட்டு நடைமுறையில் இருந்த பழக்கத்திற்கே ‘விதி’களை அமைத்துள்ளார் என்பதும், ‘கூறினார் புலவர்’, ‘என்பனார் புலவர்’, ‘மொழிப’ போன்ற வரிகளின் மூலம் அறிய வருகிறது.

தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியலில், ஆண்கள் மட்டும் தான் வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்று எந்தக் குறிப்பையும் தொல்காப்பியர் சுட்டவில்லை. சங்க இலக்கியங்;களான பத்துப்பாட்டிலிலும், எட்டுத்தொகையிலும் பெண்கள் வணிகத்தில் ஈடு பட்டதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

இதன் மூலம் சங்ககால மகளிர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவருகிறது. இருப்பினும் செல்வச்செழிப்பில் வாழ்ந்த பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. உணவு தயாரித்தலும், இனப்பெருக்கம் செய்தலுமே இவர்களின் பணியாகக் கருதப்பட்டன. பொருளாதார நிலையில் சற்றுப் பின் தங்கியிருந்த பெண்கள் வீட்டிலிருந்தும், பண்ட்;;மாற்று மற்றும் பொருளீட்டல், பொருட்டு வணிகத்தில் ஈடுபட்டதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகம் ஏற்றுமதி செய்த வாணிகப் பொருள்களின் பட்டியலில் அகில், அரிசி,ஆடைகள்,ஆரம்,இஞ்சி,இலவங்கம்,ஏலம்,கருங்காலி,மயில்,மிளகு,முத்து ஆகியன சிறப்பிடம் பெற்றிருந்தன. தமிழகக் கப்பல்கள் பொருளை விற்று பொன்னுடன் திரும்பி வருதலை கீழ்காணும் வரிகள் தெளிவு படுத்துகின்றன.

“பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடு ஆரநன்கு இழிதரும்
ஆடியல் பெருநாவாய் ”-(மதுரைக்காஞ்சி-81-83)

இவ்வாறு ஏற்றுமதி, இறக்குமதியில் தமிழகம் சிறப்புற்று இருந்திருந்தாலும்,
பெண்கள் கடல்கடந்து செல்லவில்லை. என்பதைத் தொல்காப்பியர் கீழ் வருமாறு சுட்டுகிறார்.
“முந்நீர் வழக்கம் மகடுஉவோடு இல்லை”
(தொல்.அகம்-37)

இச்செய்தியின் மூலம் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் சமூகத்தில் நிலவி இருந்ததை அறிய முடிகின்றது. சங்ககாலப் பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கு வறுமை ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.பாட்டும், தொகையுமாகிய சங்க நூல்களில் பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் பல இடங்களில் காணப்பட்டாலும், பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்களில் உள்ள செய்திக் குறிப்புகள் மகளிரின் வணிகச் சிறப்பினை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளதால் அப்பாடல்களின் செய்திக்குறிப்புகள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சங்ககால மகளிரும்-வணிகமும்

சங்க காலத்தில் பெண்கள் பல்வேறுபட்ட தொழிலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.உழவு, உணவுகாத்தல், ஆடைவெளுத்தல், ஏவல்செய்தல்,அறிவுரைகூரல்,குற்றேவல், அடிவருடதல், அரசனுக்கப்பணியாற்றல், குழந்தை வளர்த்தல், அரியல்(கள் அரித்தல்),ஆள்வோர்கலை, தேன், கிழங்கு, மீன், நெய், மீன்நெய், நறவு, மான்தசை, அவல், மோர், வெண்ணெய், கலி, கள், கரும்பு, பயறு, கெடிறு, வரால், பழையவெண்ணெய், வாளைமீன், உப்பு, முத்து ஆபரணம், சிறுகுடில், எருமை, கன்று போன்றவற்றை விற்பனை செய்ததற்கான குறிப்பு காணப்படுகின்றது.



கடை வைத்து வணிகம் செய்ததாக மதுரைக் காஞ்சி (621-622) -யில் குறிப்பு காணப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படும் வணிகத்தினைச் சிறப்போடும், மதிநுட்பத்தோடும் செய்ததைப் ‘பெரும்பாணாற்றுப்படை’ (163-168) செய்தியின் மூலம் அறியமுடிகின்றது.

ஆற்றுப்படை நூல்கள்

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களாக ஐந்து உள்ளன.

1.திருமுருகாற்றுப்படை
நக்கீரர் முருகனைப் பாடியது (317 அடி)
2.பொருநராற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார் கரிகால்வளவனைப்பாடியது
(248 அடி)
3. சிறுபாணாற்றுப்படை
நல்லூர் நத்தத்தனார் நல்லியக் கோடனைப்பாடியது
(269அடி)
4. பெரும்பாணாற்றுப்படை
உருத்திரங்கண்ணனார் ;இளந்திரையனைப்பாடியது
(500 அடி)
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை
பெருங்கௌசிகனார்; நன்னன்சேய்நன்னனைப்பாடியது
(583 அடி)

இந்த ஆற்றுப்படை நூல்கள் புறத்திணை இலக்கண அமைவுடன் அமைந்துள்ளன. இவ்வைந்து நூல்களில் திருமுருகாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படையில் மகளிர் வணிகம் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. பொருநராற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை,மலைபடுகடாம்(அ)கூத்தராற்றுப்படையில் மட்டுமே மகளிர் வணிகம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. துpருமுருகாற்றுப்படை தவிர ஏனைய ஆற்றுப்படைகளில் விறலியர், பாடினி, பாண்மகள் என குறிப்பிடப்படுவோர் தொழிலின்பொருட்டு ஊர்விட்டு ஊர்சென்று பாடல்பாடி பொருளீட்டும் பெண்களே.



ஆடல் பாடல்

தேன் விற்றல
;
கிழங்கு

மீன் நெய்

நறவு

மான் தசை

அவல்


வெண்ணெல்

கள்

கரும்பு

பயறு

வரால்.

வாளைமீன்

உப்பு


மீன்

புவிற்றல்

சிறுகுடில்விற்றல்

முத்து ஆபரணம்
கடை வைத்தல்

மோர் விற்றல்

நெல்
எருமை:கன்று



குடும்பத்துடன் சென்று பொருளீட்டல்

வுpறலியர் ஆடல் பாடல்களில் வல்லவர்களாக, வீரமிக்கவர்களாகவும் விளங்கினர்.இவர் பாடியப் பாடலுக்குப் கிடைக்கும் பரிசில்களே செல்வமாகக் கருதப்பட்டது. புறநாநூற்றில் பாரியின் புறம்புமலை பகைவர் வெல்வதற்கு எளிதன்று,விறலிக்கு எளிது(111:4)என்ற வரிகளிலிருந்து அவர்களின் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகின்றது.போர்களப்பணியில் ஈடுபட்டு வீரர்களின் விழுப்புண்ணை ஆற்றுவதற்காகவும் பாடல்பாடியதை மலைபடுகடாம் எடுத்துரைக்கிறது.அப்பாடல் வரிகள் வருமாறு:

“நெடுவலி விழுப்புண் தணிமார்காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்”
(மலை.303-304)

ஆடலையும், பாடலையும், நாடகத்தையும் தொழிலாகக் கொண்டதை பெரும்பாணாற்றுப்படை ‘நாடகமகளிர் ஆடுகளத்தெடுத்த’ என்ற வரிகளின் மூலம் சுட்டுகிறது.

பண்டமாற்று
தேன், கிழங்கு, மீன் நெய், நறவு, மான்தசை, அவல் போன்ற பொருட்களை மகளிர் விற்றதாகப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது. அவ்வரிகள் வருமாறு:

“தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறவு மறுகவும்
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் (பொரு-ஆற் 213-220)

தேன், நெய், கிழங்கிற்குப் பண்ட மாற்றாய் அல்லது விலையாய் மீன்நெய்யையும், நறவையும் பெற்றுக் கொள்வார்கள.; இனிமை பொருந்திய கரும்பிற்கும், அவலிற்கும் விலையாக மானின் தசையையும், கள்ளையும் பெறுவர் என்று ‘பண்ட மாற்று’ என்னும் வணிக உத்தியைப் பயன்படுத்தியமை இங்கு; சுட்டப்படுகின்றன.

வண்டியினை இயக்கும் திறன்

பெரும்பாணாற்றுப்படையில் உமணப் பெண்டிர் வணிகத்தின் பொருட்டு, வண்டியை ஒட்டிச் செல்லும் செய்திக்குறிப்பு காணப்படுகிறது.
அதில் தினைப்புலத்தைக் காவல் காப்பதற்காகக் கட்டப்பட்ட சிறுவீடு போன்ற பரண்மேல் கோழிக்கூடு, சிறிய உரல், காடிப்பானை போன்றவைகள் நன்கு கட்டப்பட்டுள்ள வண்டியின் முனைப்பகுதியில் தன் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு, உமணப் பெண்டிர் எருது கட்டப்பட்ட வண்டியினைத் திறம்படச்; செலுத்துகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அப்பாடல் வரிகள் வருமாறு:

“வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேர்க்கும் கூடுடைப் புதவின்
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
வீசி வீங்கு இன் இயம் கடும்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணிதோள்”
(பெரும்.ஆற்51-60)

இச்செய்தியின் மூலம் வணிகத்தில் ஈடுபட்ட பெண்கள் ஊர் விட்டு ஊர் சென்றுள்ளனர் என்பதும், எறுமைகள் பூட்டிய வண்டிகளையும் இயக்கத் தெரிந்திருப்பதையும்,தங்களுக்கு வேண்டிய் பொருட்களையும்,; உடமைகளையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்பதையம் இப்பாடலின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

அழகியல் மேல் நாட்டமற்ற வணிகப் பெருக்கம்

பெரும்பாணாற்றுப்படையில் வரும் இன்னொரு செய்தியில் ஆயர் குலப்பெண்கள் மூலப் பொருள் ஒன்றினைக் கொண்டு பல வணிகமுறையினைக் கையாண்டு தங்கள் பொருளினை விற்றனர் என்ற குறிப்பு காணப்படுகிறது.



அதில் விடியல் பொழுதில் நல் தயிரினை மத்தினைக் கொண்டு கடைந்து, வெண்ணெய் தனியாகவும், மோர் தனியாகவும் பிரித்தெடுத்து;, மோரினை நெல்லிற்குப் பண்டமாற்றாகக் கொடுக்கிறார் என்றும் வெண்ணெய் உருக்கி நெய்யெடுத்து அதனை விலைக்கு விற்று, அந்தப் பொருளுக்கு பொன்னை வாங்காமல் எருமையை வாங்கினாள் என்ற குறிப்பும் காணப்படுகின்றது. அப்பாடல் வரி வருமாறு:

“அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளார்.
எருமை நல் ஆன் கரு நாடு பெறூஉம்”
(பெரும் ஆற்-163-165)

இச்செய்தியின் மூலம் எப்பொருளை எப்படி விற்க வேண்டும் என்ற வணிக உத்தியினை ஆயர்குலப் பெண்கள் அறிந்திருந்ததையும், மூலப்பொருள் தயிரை அப்படியே விற்றால் மிகுந்த இலாபம் கிட்டாது என்பதை அறிந்து அதனை இருவேறுபட்ட விற்பனைப் பொருளாக்கி விற்ற வணிகஉத்தியினை இப்பெண்கள் அறிந்திருந்தமைப் புலப்படுகிறது.

மேலும் பெண்களென்றால் நகையின் மீது அதிக ஆர்வம்; கொண்டவர்கள் என்ற ஆணாளுமைக் கருத்தாக்கத்தினை மாற்றியமைக்கும் வகையில் வணிகத்தில் பெற்ற பணத்திற்குப் பொன்னை வாங்காமல், வணிகம் பெருகுவதற்காக மேலும் ஒரு எருமையினை வாங்கினாள் என்ற செய்திசங்ககால மகளிர் வணிகத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டினை அறிய உதவுவதுடன், அவ்வணிகம் பெருகுவதற்கான உத்தியினையும் பெண்கள் அறிந்திருந்ததையும் தெளிவுபடுத்துகிறது.

கள் விற்கும் மகளிர்
மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படையில் நெல்லினைக் கொண்ட வயலின் அருகே உள்ள நிலத்தில் பெண்கள் தெளிந்த கள்ளினை விற்ற செய்திக் குறிப்பு காணப்படுகின்றது. அப்பாடல் வரிகள் வருமாறு:

“பகன்றைக் கண்ணிப் பிழையர் மகளிர்
நெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளம் செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித்தேறல்
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவிர்”
(மலை-459-464)

இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடு சங்ககாலச் சமுதாயத்தில் இல்லை என்பது அறியவருகின்றது.

ஆய்வு முடிவு
பெண்ணென்பவள் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பது வரலாற்றில் புறந்தள்ளப்படவேண்டிய உண்மை. இதன் தொடர்ச்சிதான் தொல்காப்பியத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லுதல் கூடாது, மடலேறுதல் கூடாது, தனது காதலை வெளிப்படுத்துதல் கூடாது என்று பல்வேறு தடைகளை; பெண்களுக்கானச் சட்டவிதிகளாக இருந்திருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சமூகத்தடை இருந்த காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டபெண்களுக்கு சமூகத்தடை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஒருவரிடம் வேலைசெய்து பொருளீட்டல் என்பது மிகவும் எளிமையானது. ஆனால் தானே வணிகத்தில் ஈடுபட்டு அதனை சிறந்த முறையில் நடத்தி வெற்றி பெறுவதுடன், அதனை மென்மேலும் வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அறிவுக் கூர்மையுடன் செயல்பட்டிருக்கின்றனர் என்பது அனைவரும் கற்றக்கொள்ளவேண்டிய உத்தியாகும்.


•• ••••••••••••••••